வவுனியாவில் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று (11.03.2017) காலை 10 மணியளவில் வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகி பிற்பகல் 4 மணியளவில் நிறைவு பெற்றது.
அதன் பின்னர் இக் கலந்துரையாடல் தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்,
இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்த ஒரு கூட்டம்நடைபெற்றது.
இதில் விசேடமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பேச்சுவார்ததைகள் சம்பந்தமாகவும் இலங்கை சம்பந்தமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படுகின்ற சூழ்நிலையில் ஒரு உத்தியோகபூர்வமாக வரைவு ஒன்றை சில நாடுகள் முன்வைத்திருக்கின்றன.
இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்டுத்துகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக அதனுடைய தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எங்களுடைய நிலைமையை எடுத்துச் சொல்லுவதற்காக நாள் முழுவதும் கருத்துப்பரிமாறல்கள் மேற்கொண்டோம். இதன் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நான் தற்போழுது வாசிக்கின்றேன்..
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையால் 2015 ஐப்பசி முதலாம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட எச் ஆர் சி 30 ஒன்று என்ற தீர்மானத்தில் இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும்.
இவை கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்படுவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் ஒன்று நிறுவப்பட்டு மேற்பார்வை செய்யப்படவேண்டும்.
இலங்கை அரசாங்கம் மேற்சென்ன விடயங்களை தகுந்த பொறிமுறைகள் மூலம் நிறைவேற்றத்தவறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தத் தீர்மானத்தின் கீழ் கிடைக்கவேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக சர்வதேச பொறிமுறைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை உறுதி செய்யவேண்டும்.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் இந்தத் திர்மானத்தோடு தங்களுடைய கட்சிக்கு இணங்க உடன்பாடு இல்லை என்பதைத் தெரிவித்தார். அதையும் நாங்கள் குறித்திருக்கின்றோம் என்று மேலும் தெரிவித்தார்.